Tuesday, January 31, 2012

சாதாரண ஜெயமோகன்

தமிழ் இலக்கிய உலகில் ' ஜெயமோகன்'
பெயரைச் சொன்னதும் ஓர் அதிர்வு
ஏற்படுவதை பார்த்து வருகிறேன்.

ஜெயமோகனின் ஆழமான, நுட்பமான
எழுத்தின்மீது எனக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு.

'இவர் நோபெல் பரிசுக்குத் தகுதியானவர்'
என்று சொல்கிறது ஒரு கூட்டம்.

'இவர் மலையாளி. இந்துமத வெறியர்,
போலியான காந்தியவாதி ' என்கிறது
ஒரு கூட்டம்.

சமிபத்தில், ஒரு இலக்கியக் கூட்டத்தில்
பார்வையாளராக கலந்து கொண்டேன்.
நண்பர் ஒருவர், தனது நண்பர் ஒருவரை
எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

என்னை " ஜெயமோகன் " என்றார்.

அவரோ,"ஜெயமோகனா!." என்றார்
சத்தமாக !

அதிர்ச்சி, வெறுப்பு, கொஞ்சம் ஆத்திரம்
எல்லாமே தெரிந்தது அவரது கண்களில்.

உடனே நண்பர்,
"இவர் எஸ். எஸ் ஜெயமோகன்,
ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்"
என்றார்.

அப்போது, அவர் என்னை சாதாரணமாகப்
பார்த்தார். நான் சொன்னேன்,
"நான் சாதாரண ஜெயமோகன்" என்று !