Sunday, May 16, 2010

இசையின் தரிசனம்


சமிபத்தில், ஏற்றுமதி-வர்த்தகம் தொடர்பான ஒருநாள் கருத்து அரங்கம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

அதில் பங்கேற்று மாலை நேரத்தில் வெளியே வரும் போது, வரவேற்பு கூடத்திற்கு அருகில் இசை அமைப்பாளர் இளையராஜா அங்கு தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

இசைக்கென்று இசைகின்ற ஒரு ரசிகர்கள் ராஜ்யத்தைப் படைத்த இசை
அரசர் மிகவும் எளிமையாக, ஒரு சித்தர் மாதிரி அமைதியாக இருந்தார்.
அவரைப் பார்த்ததும் எனக்குள் ஒரு ஆனந்த பரவசம் ஏற்பட்டது.

ஆயிரம் பாடல்களுக்கு மெட்டுப் போட்ட அவரது விரல்களைத் தொட்டு கை குலுக்க ஆசைப் பட்டேன். ஏனோ.. மனசு மறுத்து விட்டது.

அந்த நேரத்தில், அவருக்கு அது இடஞ்சலாக இருக்கும் என்று
எனக்குத் தோன்றியது. விடுதியை விட்டு வெளியே வந்து விட்டேன்.

அந்தி மழை பொழிகிறது .....

இது ஒரு பொன் மலை பொழுது ....

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு ...

காதல் ஓவியம் .. .

இப்படியாக, வைரமுத்து-இளைய ராஜா கூட்டணியில் உருவான
பாடல்கள் என் நினைவுக்கு வந்தது.

நிஜமாகவே, திரை இசைப் பாடல்களுக்கு அது ஒரு வசந்த காலமே !

நாம் மானசீகமாக நேசிக்கும் உன்னத படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலை வேந்தர்கள் இங்கே, நாம் வாழும் இடங்களில்தான் வாழ்கிறார்கள் என்று நினைக்கிற போது உள்ளம் மகிழ்கிறது.

வீடு வரும் வரை இதைப் பற்றிதான் சிந்தனை..

பிரபலங்களை ஏன் நட்சத்திரங்கள் என்று அழைக்கிறார்கள் என்று அப்போதுதான் கொஞ்சம் புரிந்தது. அவர்கள் மின்னுகிறார்கள்.
தொலைவில் தொட முடியாத தூரத்தில் இருக்கிறார்கள்.
நாம் அவர்களை அண்ணாந்துதானே பார்கிறோம் !

No comments:

Post a Comment